
மதுரை: மதுரை பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மேலும் இருவர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கடந்த 31ம் தேதி மதுரையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளான, கீரைத்துறைப் பகுதியைச் சேர்ந்த சபா ரத்னம், ராஜூ, சந்தானம் உள்ளிட்ட 7 பேர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரணடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இவர்கள், 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிவடைந்ததை அடுத்து, 7 பேரும் நேற்று முன்தினம் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்..
இந்நிலையில், பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக மேலும் இருவர் சரணடைந்துள்ளனர். அட்டாக் பாண்டியின் சொந்த பகுதியான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த விஜய் பாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் நேற்று மதியம் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதில் விஜய் பாண்டி, அட்டாக் பாண்டியின் சகோதரி மகன் என்பது தெரியவந்துள்ளது.










