
ஊட்டி: உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் இன்று தமிழகத்திலும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலாத் தலங்களிலும், ஊட்டி, கொடைக்கானல்,குன்னூர் உளள்ளிட்ட மலைவாசஸ்தலங்களிலும் காதலர்கள் குவிந்து விட்டனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்து வந்த காதலர் தினம் இப்போது இந்தியாவிலும், பிரபலமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் காதலர்கள் மயமாக காணப்படுகிறது இந்தியா.
வாழ்த்து அட்டைகள் பரிமாறல்,ரோஜாப் பூ கொடுத்தல்,முத்தமிடுதல், மதிய உணவு விருந்துக்குச்செல்லுதல், படம் பார்த்தல், பிடித்த இடத்திற்குப் போய் வருதல், முதல் முறையாக சந்தித்த இடத்திற்கு விசிட் அடித்தல் என்று காதலர்கள் உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களில் காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளின் சொர்க்கபூமியான ஊட்டி, குன்னூரிலும் காதல் ஜோடிகளின் கூட்டத்துக்கு குறைவில்லை. ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், பைக்காரா இல்லங்கள் இன்று காலையிலேயே காதலர்களின் வருகையால் களைகட்டியது.
இதேபோல் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ப்ஸ்ராக், டால் பின்நோஸ் பகுதிகளிலும் இளஞ்ஜோடிகளை அதிகம் காணமுடிந்தது. இவர்களில் வெளிமாநில காதல் ஜோடிகளே அதிகம்.
இதேபோல திருச்சியில் முக்கொம்பு, உச்சிப்பிள்ளையார் கோவில், சென்னையில் கடற்கரைகள், ஷாப்பிங் மால்கள்,தியேட்டர்கள், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களிலும் காதல்ஜோடிகள் கை உரசியபடி,தோள் உரசியபடி அலைமோதிக் கொண்டுள்ளனர்.


















