
மதுரை: மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக திமுக நிர்வாகி அட்டாக் பாண்டியின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ் கடந்த மாதம் 31ம் தேதி 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நத்தம் நீதிமன்றத்தில் சபாரத்தினம், சந்தானம், ஆசாமுருகன், செந்தில், லிங்கம், சேகர், கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் சரண் அடைந்தனர்.
சரண் அடைந்த அவர்கள் மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவர்கள் 7 பேரும் மீண்டும் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திமுக பிரமுகரும், பிரபல ரவுடியுமான அட்டாக் பாண்டி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவானதால், அவர் இருக்கும் இடம் போலீசாருக்கு தெரியவில்லை.
இந்த நிலையில் போலீசார் அட்டாக் பாண்டியின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரின் மனைவி தயாளு, அவரது சகோதரி அம்மாபொன்னு, உறவினர்கள் கார்த்திக், முருகன், பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் போலீசாருக்கு தேவையான தகவல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.


















