
தேனி: மதுரை, ராமநாதபுரம் போல் தேனி மாவட்டத்துக்குள் நுழைய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் மற்றும் மக்கள் விடுதலைக் கட்சி ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
புதிய தமிழகம் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஹக்கீம், மக்கள் விடுதலைக் கட்சியின் மாநில செயலாளர் பூமிநாதன் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளித்துள்ளனர்.
இம்மனுவில், சமூக அமைதி, ஜாதி ஒற்றுமை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையிலும் தலித்துகலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார் டாக்டர் ராமதாஸ். ராமதாஸ் மற்றும் பா.ம.க துணை அமைப்புகளின் தலைவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.
மேலும் 19-ந் தேதி தேனி மாவட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் வர திட்டமிட்டிருக்கிறார். இதனால் அமைதிக்கு பங்கம் ஏற்படும். எனவே ராமதாஸ் தேனி மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இதேபோல் திருப்பூர், நாமக்கல் போன்ற பல மாவட்டங்களிலும் டாக்டர் ராமதாஸ் நுழைய தடை விதிக்கக் கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.










