சென்னை: காதலர்கள்தான் இணைந்து காதல் தினத்தைக் கொண்டாடனுமா என்ன? எதிரெதிர் தத்துவம் பேசும் இயக்கங்களின் தொண்டர்களும் கூட காதலர் தினத்தன்று ஒரே இடத்தில் சந்தித்து தங்களது ‘எதிர்' லவ்வை வெளிப்படுத்துவார்களாம்!
சென்னை மெரினா கடற்கரையில் காதலை எதிர்ப்பதற்காகவே புறப்பட்ட கட்சி போல் ஆண்டுதோறும் அடாவடியில் ஈடுபடும் இந்து மக்கள் கட்சியினர் இந்த ஆண்டும் கையில் தாலிக் கயிறுகளோடு கண்ணகி சிலை அருகே கூடினர். மேலும் காதல் தின வாழ்த்து அட்டைகளை தீயிட்டும் எரித்தனர்.
இச்செய்தியைக் கேள்விபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர், அதெப்படி காதலை எதிர்க்கலாம் என்று கோதாவில் இறங்கினர். அப்புறம் என்ன? இரண்டு தரப்புக்கும் இடையே செம ‘லவ்வு' ஏற்படும் சூழல்! கடைசியில் போலீசார் தலையிட்டு இருதரப்பையும் விலக்கிவிட்டனர்.
இந்த களேபரங்களால் அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ எனக் கருதி போலீஸ் காதல் ஜோடிகளை மெரினாவுக்குள் அனுமதிக்கவில்லை. வேற வழியின்றி காதலர் தினத்தைக் கொண்டாட வந்த காதல் ஜோடிகள் அப்படியே பட்டினப்பாக்கம் பக்கம் நகர்ந்தனர்...










