பிரணாப்பின் தனிப்பட்ட முடிவு இல்லை
அரசியல் சட்டம், சட்ட வரைவு 72 ன் படி கருணை மனுக்கள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது அவரது தனிப்பட்ட முடிவாக இல்லாமல் கூட்டு முடிவாக மட்டுமே இருக்கும்.
முழு அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கே
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் கருணை மனுவை ஏற்று மன்னிப்பு வழங்குவது அல்லது தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது அல்லது நிரந்தரமாக நிறுத்துவது அல்லது மனுவை நிராகரிப்பது அல்லது மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனை வழங்குவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது.
53வது சட்டப் பிரிவு சொல்வது என்ன...
அரசியல் சட்டத்தின் 53வது சாசனத்தின்படி மத்திய நிர்வாகத்தின் அதிகாரத்தை நேரடியாகவோ அல்லது சட்ட பிரிவுகளின்படி அதிகாரிகளை கொண்டோ நிறைவேற்றும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமன்ற தற்காலிகமாக செயல்படாமல் இருக்கும் போது மட்டுமே அவரது அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.
74வது சட்டப் பிரிவு என்ன சொல்கிறது என்றால்...
74 வது சாசனத்தின்படி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பெயரிலேயே செயலாற்ற வேண்டும். மேலும் அமைச்சர்கள் குழு, குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் எந்த ஒரு ஆலோசனைக்கு எதிராகவும் எந்த ஒரு கோர்ட்டும் விசாரிக்க முடியாது.
14 கருணை மனுக்களையும் நிராகரித்த சர்மா
சங்கர் தயாள் சர்மா குடியரசுத் தலைவராக இருந்தபோது, தனது பதவிக் காலத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட 14 கருணை மனுக்களையும் நிராகரித்துள்ளார்.
ஒரே ஒரு தூக்கை ஆயுளாக மாற்றிய கே.ஆர்.நாராயணன்
அதேபோல கே.ஆர்.நாராயணன், ஒரே ஒரு கருணை மனுவிற்கு மரண தண்டனைக்கு பதிலாக மாற்று தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மனுவை நிராகரித்த கலாம்
அப்துல் கலாம், ஒரு கருணை மனுவை நிராகரித்தும், மற்றொன்றை வேறு தண்டனை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். கலாம் தனது பதவி காலம் முடியும் போது 25 கருணை மனுக்களை நிலுவையில் வைத்திருந்தார்.
34 பேரை மன்னித்த பிரதீபா.. 3 தமிழர்களுக்கு மட்டும் நிராகரிப்பு
பிரதீபா பாட்டீல் தனது பதவி காலம் முடியும் போது 34 பேருக்கு மன்னிப்பு வழங்கி உள்ளார். 3 மனுக்களை இவர் நிராகரித்துள்ளார். இந்த மூன்று பேரும் ராஜீவ் காந்தி கொலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.