தென்காசி: நெல்லை மாவட்டத்தில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யாத காரணத்தினால் மழையை நம்பி விதை விதைத்த விவசாயிகள் "வாடிய பயிரைக் கண்டு வாடினர்". இம்மாவட்டத்தில் வரட்சி தான்டவம் ஆடியது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியரை உள்ளிட்ட பகுதிகளில் லாரி மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி விளை நிலங்களுக்கு பாய்ச்சிய விவசாயிகளுக்கு இன்று பெய்த மழை மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் வறண்டு கிடந்த குற்றால அருவிகளில் அதிகாலை முதலே தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டுகிறது. அருவியில் தண்ணீர் கொட்டும் தகவல் அறிந்ததும் அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதத் தொடங்கியுள்ளது.










