
மதுரை: திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க அழகிரிக்கு ‘அஞ்சா நெஞ்சன்' பட்டம் கொடுத்த மதுரை உடன்பிறப்புக்கள் இப்போது அவரது மகன் துரை தயாநிதிக்கு ‘அன்பு நெஞ்சன்' என்ற பட்டம் கொடுத்து அசத்தியுள்ளனர்.
பொட்டு சுரேஷ் படுகொலைக்குப் பின்னர் மதுரையில் நடைபெறும் எந்த விழாவிலும் மு.க. அழகிரி கலந்து கொள்வதில்லை. கால்வலி வேறு படுத்தி எடுப்பதால் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளார்.
இந்த நிலையில் பிப்ரவரி 15ம் தேதி முன்பு மதுரையைச் சேர்ந்த ஃபிளக்ஸ் போர்டு தயாரிப்பாளர் மதனின் தம்பி சதீஷ்குமாரின் திருமணம் ஒன்றை நடத்தி வைத்துள்ளார் துரை. தயாநிதி. திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்ற துரை. தயாநிதியை வாழ்த்தி வழி நெடுகிலும் 25க்கும் மேற்பட்ட பேனர்களை வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த அடைமொழி "எங்களின் அன்பு நெஞ்சனே"... என்பதுதான் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
திருமண வீட்டிற்குள் நுழைந்த உடன் அவரது ஆதரவாளர்கள் மலர் கிரீடம் சூட்டியதோடு 10,001 ரூபாய் பணமாலையை போட்டு வரவேற்பு கொடுத்துள்ளனர்.
திருமண வீட்டில் எத்தனையோ பெரியவர்கள் இருக்க தாலி எடுத்துக் கொடுத்து முதன் முறையாக ஒரு திருமணத்தை நடத்திவைத்துள்ளார்.
அதே மட்டுமல்லாது ரூ.1001 மொய் வைத்துவிட்டு வந்திருக்கிறார்.
இவற்றோடு மட்டுமல்லாது அன்றைய தினமே மாலையில் மன்னன் ஏரியாவான மேலப்பொன்னகரம் பகுதியில் அப்பாவின் பிறந்தநாள் நலத்திட்ட விழாக்களை தொடக்கிவைத்துள்ளார்.
இவர் போகும் வேகத்தைப் பார்த்தால் அதிரடி அரசியலில் இறங்கி பணியை ஆரம்பித்துவிடுவார் என்றே பேசிக்கொள்கின்றனர் உடன்பிறப்புக்கள்.










