மீண்டும் அதிமுகவில் சேர எஸ்.வி. சேகர் விருப்பம்: சேர்த்துக் கொள்ளப்படுவாரா?
இது குறித்து அவர் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மீண்டும் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு கடிதம் அளித்தேன். விரைவில் நல்ல பதில் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்.
மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த என்னை மே மாதம் தங்கபாலு நீக்கினார். பின்னர் அவரையே நீக்கிவிட்டனர். இது தான் காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் காங்கிரஸ் ஒருபோதும் தலை தூக்கவே முடியாது என்று முதல்வர் கூறியிருப்பது 100 சதவீதம் உண்மை.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் முஸ்லிம்கள் தான் அவரை தேர்வு செய்து பதவியில் உட்கார வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் அரசு சார்பில் இலவசம் எல்லாம் தேவையில்லை என்று மக்கள் கூறிவிட்டனர். அதனால் அங்கு மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. அரசு மதுபானம் விற்பனை செய்யவில்லை.
தமிழக மக்களும் இலவசங்கள் வேண்டாம் என்று கூறினால் மதுபானம் இல்லாமல் போகலாம் என்றார்.
எஸ்.வி.சேகர் கடந்த 2009ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். அதன் பிறகு கட்சி விரோத செயலுக்காக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பிராமணர்கள் சங்கத்தை துவங்கிய அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். இதையடுத்து திடீரென காங்கிரஸில் சேர்ந்தார். அங்கும் நீக்கப்பட்ட அவர் தற்போது மீண்டும் அதிமுகவுக்கு போக விரும்புகிறார்.