10, 100 மலையேறிப் போச்சு… இனி 500, 1000 ரூபாய் நோட்டுதான்: ரிசர்வ் வங்கி
டெல்லி: இந்தியாவில் 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுக்கள் செலவழிப்பதும், அதன் பயன்பாடும் குறைந்து வருகிறதாம். அதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் பற்றியும், இந்திய மக்களின் பணப்புழக்கம் பற்றியும், பணவீக்கம் பற்றியும் பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி சுவாரஸ்ய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
90 வரை 10 டூ 50
1990ம் ஆண்டுகள் வரை 10, 20, 50 ரூபாய் தாள்கள் பயன்பாடு அதிகம் இருந்த நிலையில், 1998 முதல்100 ரூபாய் தாள்கள் முன்னிலை பெற்றன.
2004க்குப் பிறகு ரூ. 500
2004ம் ஆண்டுக்குப் பிறகு, 500 ரூபாய் தாள்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
500 ரூபாயின் பங்கு 47%
2010 -11ல் மொத்த பணப்புழக்கத்தில் 500 ரூபாயின் பங்களிப்பு 47 சதவீதமாக இருந்துள்ளது. மாறாக, 100 ரூபாயின் பங்களிப்பு 14.8 சதவீதமாக மட்டுமே இருந்ததும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 ரூபாய் நோட்டுக்களின் பங்களிப்பு வெறும் 0.6 சதவீதம் மட்டுமே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கியத்துவத்தில் மாற்றம்
அதிகரிக்கும் விலைவாசி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுவரும் மாற்றம், பணப்பரிமாற்றத்தில் வந்துள்ள புதிய முறைகள் என பலவும், ரூபாய் நோட்டுக்களின் முக்கியத்துவத்தில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றத்துக்கு காரணம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
புத்தம் புதிய 1000 ரூபாய்
புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் 2000-வது ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது என்றும், இப்போது 500 ரூபாய்க்கு அடுத்து, அதிக பங்களிப்பை தரும் கரன்சி தாளாக இது விளங்குவதாகவும் தெரியவந்துள்ளது.