பாதிரியார் வீட்டில் பணம் திருட்டு... இன்னொரு பாதிரியார் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிரியார் ஒருவரது வீட்டில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் மற்றும் பொருட்கள் திருடு போயின. இந்த வழக்கில் இன்னொரு பாதிரியார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், என் அண்ணன் ஜெயராஜ், திண்டுக்கல் டி.இ.எல்.சி. சர்ச்சில் பாதிரியாராகவும், ஐ.டி.ஐ. நிர்வாகியாகவும் பணிபுரிந்தார்.
ஜனவரி 30ம் தேதி, உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவமனைக்கு செல்ல 1.5 லட்சம் ரூபாய் கொண்டு வருமாறும் கூறினார். பணத்தை நான் கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்தேன். அவரது உடல் நிலை மோசமானது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடலை தஞ்சாவூரில் அடக்கம் செய்தோம்.
மீண்டும் திண்டுக்கல் வந்த போது என் அண்ணன் வீட்டின் பூட்டை ஐ.டி.ஐ., ஊழியர் அல்போன்ஸ், அம்மாபட்டி பாதிரியார் மார்கஸ் ஆகியோர் உடைத்து 1.5 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்களை திருடிவிட்டு புது பூட்டு போட்டதும், இதற்கு டி.இ.எல்.சி., செயலர் சார்லஸ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.