
டெல்லி: உலகில் இப்போது எந்தப் பகுதியிலும் எந்த நாட்டிலும் பொருளாதார 'பிக் பேங்' (big bang) நடக்கவில்லை என்றும், எல்லா பக்கமும் பொருளாதாரத் தேக்கம் தான் காணப்படுகிறது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மத்திய பட்ஜெட் குறித்து கூகுள் பிளஸ் இணையத்தளத்தில் வீடியோ சேட் மூலம் தன்னிடம் பொது மக்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சிதம்பரம் பதிலளித்தார். அவர் கூறுகையில்,
பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் பங்குகளை விற்பதன் மூலம் இந்த நிதியாண்டில் ரூ. 40,000 கோடி திரட்டப்படும். சிறிய நிறுவனங்களில் உள்ள பங்கு விற்பனை மூலம் மேலும் ரூ. 14,000 கோடி திரட்டப்படும்.
இந்த ஆண்டு பட்ஜெட் முழுக்க முழுக்க நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை மட்டுமே மையமாகக் கொண்டது. வளர்ச்சி என்ற என்ஜினை மீண்டும் ஸ்டார்ட் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.
உலகம் முழுவதுமே பொருளாதார நிலைமை ஒரு கஷ்டமான சூழலை சந்தித்துக் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் பொருளாதார தேக்கம் நிலவுகிறது. உலகில் எந்தப் பகுதியிலும் எந்த நாட்டிலும் பொருளாதார 'பிக் பேங்' இல்லை. எல்லா பக்கமும் பொருளாதாரத் தேக்கம் தான் காணப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது சில அறிவிப்புகள் (சலுகைகள்) அறிவிக்கபடும்.










