ஹைதராபாத் குண்டுவெடிப்பில் மதுரையை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு?: ஸ்பெஷல் டீம் விசாரணை
ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பயங்கர வெடிபொருட்கள் மதுரை வழியாக கொண்டு செல்லப்பட்டதாக ஒரு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்தே மதுரையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர் புலனாய்வு அதிகாரிகள். இவர்கள் மதுரையில் தங்கியிருந்து சில ரகசிய புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனராம்.
மீனாட்சி அம்மன் கோவில் ரெட் அலெர்ட்
தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்தான் முதலாவது சாய்ஸாக இருக்கலாம் என்ற சந்தேகம் மத்திய உளவுத்துறைக்கு உண்டு. எனவே மீனாட்சி அம்மன் கோயில் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறது. கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ரெட் அலர்ட்டில் வைத்திருக்கிறார்கள்.
கோயிலை தகர்க்க ஆர்.டி.எக்ஸ். வகை வெடிமருந்துகளை கொண்டு வந்து மதுரையில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும், சில உளவு பார்த்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.
நடைமுறையில் சாத்தியமில்லை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆபத்து வரலாம் என்று எச்சரித்துள்ள மத்திய உளவுத்துறை சில பரிந்துரைகளை போயில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளது. ஆனால் அவற்றை நடைமுறைக்கு கொண்டுவருவது சாத்தியமானதாக இல்லை என்கின்றனர் கோவில் நிர்வாகத்தினர்.
கோயிலுக்குள் இருக்கும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், ஆவணி மூல வீதிகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்பவை மத்திய உளவுத்துறையின் பரிந்துரையில் உள்ளது.
இவை கோயிலின் தினசரி நடவடிக்கைகளை பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்பதனால்தான் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கோயில் நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.