பந்த்: சென்னையில் மறியல்!- ஸ்டாலின், கி.வீரமணி, திருமா உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது!
சென்னை: டெசோ பந்த் போராட்டத்தையொட்டி சென்னையில் மறியலில் ஈடுபட முயன்ற மு.க. ஸ்டாலின், கி.வீரமணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 17 இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் பல இடங்களில் கடைகளில் அடைக்கப்பட்டிருந்தாலும் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. பொதுவாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
சென்னையில் திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகம் முன்பாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரத்தில் கடைகளை அடைக்க வலியுறுத்திய திமுகவினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஆவடியில் நகர் மன்றத் தலைவர் நாசர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திருவொற்றியூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
தென்சென்னையில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை, கடற்கரை காமராஜர் சாலை, மயிலாப்பூர் லஸ் சந்திப்பு அண்ணா அறிவாலயம் எதிரே, அண்ணா நகர் ஆர்ச், கே.கே.நகர் ரவுண்டானா, சைதாப்பேட்டை பனகல் மாளிகை, திருவான்மியூர், தி.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும், வட சென்னையில் வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், டவுட்டன், பெரவள்ளூர், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம் ஆகிய 17 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.