குஷ்பு மீது கல்வீச்சு பிளஸ் சொல்வீச்சு... காரல் மார்க்ஸை காய்ச்சி எடுத்த கருணாநிதி
சமீபத்தில் வாரப் பத்திரிகை ஒன்றில் திமுக ஆதரவு நடிகையான குஷ்பு திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் அடுத்த தலைவராக வருவது குறித்து கேள்வி ஒன்றுக்கு சர்ச்சைக்குரிய பதில் அளித்தார்.
இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. குஷ்பு திருச்சியில் திமுக எம்.பி. திருச்சி சிவா இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு பெமினா ஓட்டலுக்கு திரும்பினார். அப்பொழுது அங்கு ருந்த திமுகவினர் சிலர் குஷ்பு ஓட்டலுக்கு வந்த கார் மீது செருப்புகளை வீசினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை குஷ்பு, தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை காலி செய்து விட்டு சென்னை செல்ல கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கும் சிலர் குஷ்பை கண்டித்து கோஷமிட்டு, செருப்பு வீசினர். பின்பு, அவர் விமானம் ஏறி சென்னை சென்று விட்டார்.
மேலும், சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டில் கல்வீச்சு நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ் பெயர் அடிபட்டது. இவர் குஷ்புவை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, காரல்மார்க்ஸ் திமுக தலைவர் கருணாநிதியை பார்த்து ஆசி வாங்க வந்தார். அப்போது, குஷ்பு விவகாரம் குறித்து காரல் மார்க்ஸிடம் விசாரணை நடத்திய கருணாநிதி கடும் கோபம் கொண்டு அவரை வறுத்தெடுத்துவிட்டாராம்.
இதனால் வெலவெலத்துப் போன அவர் ஆளை விட்டால் போதும் என கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.