மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார் பாலா - மனித உரிமை ஆர்வலர் மார்க்ஸ் கண்டனம்
இதுகுறித்து நக்கீரன் இணையத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டி...
பரதேசி படமாக்க வீடியோவைப் வீடியோவை பார்த்தேன். நடிப்பதற்காக இப்படி நடிகர்கள் அடிவாங்குவதை பார்த்தபோது மனம் பதறியது. இந்த கொடூரச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம். ரொம்ப அநாகரிகமா நடந்துக்கிட்டிருக்காரு இயக்குனர் பாலா. மிகவும் மோசமாக மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டதாக நடந்து கொண்டிருக்கிறார்.
திரைப்பட கோட்பாடு என்று பார்த்தாலும் கூட காட்சிகளை தத்ரூபமாக அப்படியே திரையில் இயக்கி காட்டுவது என்பதை சிறந்த திரைப்பட கோட்பாட்டாளர்கள் ஏற்பதில்லை. பார்ப்பது திரைப்படம்தான் என்கிற உணர்வு பார்வையாளர்களுக்கு இருக்கும்வரைதான் அந்தக்காட்சி குறித்து மனதில் அசைபோட்டு ஒரு விமர்சனமான கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்.
தத்ரூபமான காட்சி என்கிறபோது காட்சியுடன் ஒன்றி பாத்திரங்களோடு அழுது அல்லது சிரித்து விட்டுப்போய்விடுவார்களே ஒழிய அந்த காட்சி குறித்த ஒரு சிந்தனை பார்வையாளர்களுக்கு ஏற்படுவதில்லை.
அதனால், ஒரு நல்ல திரைப்பட கோட்பாட்டாளர்கள் தத்ரூபம் என்பதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாலாவின் இந்த செயல்பாடு ஒரு நல்லத்திரைப்பட கோட்பாடும் அல்ல. அடிப்படையில் இது மனித உரிமை மீறல். முதலாளி தொழிலாளி பிரச்சனையாக பார்க்கவேண்டும்.
திரைப்படத் துறையில் நிறைய எழுத்தாளர்கள் நுழைகிறார்கள். இவர்கள் எழுத்துத் துறையில் வீர ஆவேசமாக பேசிக்கொண்டு மற்றவர்களை ஆமோதித்து எழுதிக்கொண்டிருப்பவர்கள், திரைப்படத் துறைக்குப் போய்விட்டால் மட்டும் கமல்சார், ரஜினிசார், பாலா சார் என்று அவங்களுடைய தகுதிக்கு மீறி புகழ்வது.
இப்படி சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் புகழும்போது பாலா போன்றவர்களுக்கு திமிறும் வந்துவிடுகிறது. குறிப்பாக பாலாவை பெரிய டைரக்டர் என்றும் ரியல் டைரக்டர் என்று ஓவராக புகழ்ந்துகொண்டிருப்பதன் விளைவுதான் இது. இப்படி தொடர்ந்து திரைப்பட தொழிலாளர்களை தாக்கி மனித உரிமை மீறும் வகையில் நடந்துகொண்டால் சட்டரீதியாக அவர்மீது நடவடிக்கை எடுக்கவைக்கவும் தயங்கமாட்டோம் என்றார் கோபத்துடன்.