சம்மதத்துடன் செக்ஸ்.. வயது 18 தான், 16 ஆக குறைப்பில்லை-நாளை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
டெல்லி: சம்மதத்துடன் கூடிய செக்ஸ் உறவுக்கான வயதை 18லிருந்து 16 ஆக குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு விட்டது. பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத் திருத்த மசோதா நாளையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
டெல்லி பாலியல் பலாத்காரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பலாத்கார சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர் என்பதும், ஆனால் சட்டப்படி அவனுக்கு பெரிய அளவில் தண்டனை கிடைக்காது என்பதும் மக்களை அதிர வைத்தது.
இதையடுத்து பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். கற்பழிப்புகளுக்குக் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பாலியல் வன்கொடுமைச் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதுதொடர்பான மசோதாவில் பல்வேறு அம்சங்களைச் சேர்க்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
அவற்றில், செக்ஸ் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான வயதை 18இல் இருந்து 16ஆகக் குறைக்கும் அம்சமும் ஒன்றாகும். இதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஜெய்ப்பூரில் 3 நாள்கள் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்துக்குப் பின் அந்த அமைப்பின் மூத்த தலைவர் பையா ஜோஷி, செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பெண்களின் திருமண வயது என்பது 18-ஆக உள்ளது. ஆனால், திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான வயதை 16ஆகக் குறைக்க மத்திய அரசு விரும்புகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதை எதிர்க்கும் என்றார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி
இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. அரசுத் தரப்பிலோ மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் முரண்பாடுகளும், முட்டல் மோதல்களும் ஏற்பட்டன.
சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவிக்கையில், வயதைக் குறைப்பதால் ஆபாசமும், அவமானங்களும்தான் அதிகரிக்கும். குற்றச் செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். இதை தவறாக பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மேலும் ஆண்களுக்கு எதிராக
சட்டத்தைத் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார்.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தபப்ட்டது. அதில் சில திருத்தங்களுக்கு மத்திய அரசு உடன்பட்டது.
வயது குறைப்பில்லை
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து வயதுக் குறைப்பு முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. எனவே மறுபடியும் வயது 18 ஆகவே உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்தத்துடன் கூடிய மசோதாவை நாளை லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.