இனப் படுகொலைக்கு இந்திய அரசும் கூட்டுக் குற்றவாளி... மும்பையில் வைகோ ஆவேசம்
மும்பை: இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பேற்க வேண்டும். ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போனதற்கு இந்தியாவும் கூட்டுக்குற்றவாளிதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும். மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு கண்டன ஆர்பார்ட்டம் நடைபெற்றது.
பா.ஜனதா கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை ஏற்றார். கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய வைகோ, இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும். தனி ஈழம் உருவாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா எம்.பி.சஞ்சய்ராவுத், மும்பை பா.ஜனதா தலைவர் ராஜ்புரோகித், மராட்டிய நவநிர்மாண் சேனா எம்.எல்.ஏ.நந்காவ்ங்கர் மற்றும் மும்பையில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்டனர்.