
டெல்லி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்புத் தெரிவித்த அடுத்த அரை மணி நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.
இன்று காலை ரெய்ட் தொடங்கியதுமே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஸ்டாலின் வீட்டை நோக்கி திமுக தலைவர்களும் தொண்டர்களும் குவிய ஆரம்பித்தனர்.
இதனால் பெரும் டிராபிக் ஜாம் ஆகிவிட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இந்த ரெய்ட் நடக்க ஆரம்பித்து தீவிரம் அடைந்த நிலையில், டெல்லியில் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்த ப.சிதம்பரம், இந்த ரெய்ட் சரியல்ல. இதை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகவே நான் அஞ்சுகிறேன். இது குறித்து அந்தத் துறையின் அமைச்சரிடமும் பேசியுள்ளேன் என்றார்.
வழக்கமாக எந்த சர்ச்சைகளிலும் மாட்டிக் கொள்ளாத அளவுக்கு வார்த்தைகளை மிக மிக அளந்து, நிதானமாகப் பேசும் சிதம்பரம், இன்னொரு துறையின் விவகாரத்தை தலையிட்டதை ஒப்புக் கொண்டாரோ, அப்போதே அவர் இந்த ரெய்டுக்கு காங்கிரஸ் தலைமையிடம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது உறுதியாகிவிட்டது.
அவர் பேசி முடித்த அடுத்த அரை மணி நேரத்தில் ரெய்ட் முடிந்துவிட்டதாகக் கூறி சிபிஐ அதிகாரிகள் கிளம்பிவிட்டனர்.
ரெய்ட் நடத்தவில்லை-சிபிஐ பல்டி:
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய காரைத் தேடியே வந்ததாகவும், விசாரணை நடத்தவே வந்ததாகவும், ரெய்ட் நடத்த வரவில்லை என்றும் சிபிஐ திடீர் பல்டி அடித்துள்ளது.
காரை ஸ்டாலின் என்ன பெட்ரூமுக்குள்ளா நிறுத்தி வைத்திருப்பார் சிபிஐ அங்கு போய் தேட.
எப்ஐஆரில் ஸ்டாலின்-உதயநிதி பெயர் இல்லை:
மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்), ஸ்டாலின் மற்றும் சிபிஐ குறிப்பிடும் ஹம்மர் காரை பயன்படுத்தி வரும் அவரது மகன் உதயநிதி ஆகியோரின் பெயரே இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாறாக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் மூன்று அதிகாரிகள் பெயர் மட்டுமே புகார்தாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளது.





















