ஈழத் தமிழருக்கான மாணவர்கள் போராட்டம்- மூடப்பட்ட கல்லூரிகள் நாளை திறப்பா?
சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடைபெறுவதால் மூடப்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் நாளை திறக்கப்படுமா? அல்லது ஏப்ரல் 1-ந் தேதி திறக்கப்படுமா? என்பது பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை.
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை, போர்க்குற்றம் என பிரகடனம் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனை தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டன. ஆனால் மாணவர்கள் போராட்டம் முன்னைவிட தீவிரமானது.
இந்நிலையில் மூடப்பட்ட அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் நாளை திறக்கப்படும் என்ற செய்தி வெளியானது. ஆனால் கல்லூரிகள் திறக்கப்படுவது பற்றி அரசுத் தரப்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை.
அனேகமாக இம் மாதம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுவிட்டு ஏப்ரல் 1-ந்தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது.