இலங்கையில் போரை தீவிரப்படுத்தியதுதான் தான் கருணாநிதியின் சாதனை: ஜெயலலிதா
இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மாணவ- மாணவியர் நடத்தி வரும் போராட்டம் குறித்து இன்று சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதன்மீது நடந்த விவாதத்தில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் பேசினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்தும், இந்தப் பிரச்சனை தொடர்பாக மாணவ- மாணவியர் நடத்தி வரும் போராட்டம் குறித்தும் உறுப்பினர்கள் இந்த அவையினுடைய கவனத்திற்கு கொண்டு வந்து தங்களது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை எதிர்த்தும், இலங்கை அரசின் இனவெறிக் கொள்கையை எதிர்த்தும் அங்குள்ள தமிழர்கள் 1980ம் ஆண்டிற்கு முன்பிருந்தே குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த நீண்ட நெடிய உரிமைப் போராட்டத்தை நசுக்கும் வண்ணம், ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்க வேண்டும் என்ற நோக்கில் 2007ம் ஆண்டிலிருந்து திட்டம் தீட்டி, அதனை வெற்றிகரமாக 2009ம் ஆண்டு நிறைவேற்றியது இலங்கை அரசு.
தமிழினத்தை அழித்த சிங்கள வெறிபிடித்த இலங்கை அரசுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்தது திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.
இலங்கை ராணுவத்தினருக்கு இந்திய மண்ணில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்தது, இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது, மிக நவீன ராணுவ ரேடார் கருவிகளை வழங்கியது, இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் இலங்கைக்கு அடிக்கடி சென்றது, என பல செய்திகளை அப்போது ஊடகங்கள் படம் பிடித்துக் காண்பித்தன. நானும் இது குறித்து அறிக்கைகள் வெளியிட்டு, இந்திய அரசின் தமிழின விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன்.
நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கருணாநிதி...
இந்தச் செய்திகளுக்கு எல்லாம் மத்திய அரசு எவ்வித மறுப்பையும் தெரிவிக்கவில்லை. தமிழர் நலனை முன்னிட்டு மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டும் என்றும் அப்போதே நான் தெரிவித்து இருந்தேன். ஆனால், அப்போது மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தலைவர் கருணாநிதியோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ‘இரண்டு வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா' என்ற அளவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். பின்னர் ராஜினாமா கடிதங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டன என்பதை உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
சில நாட்கள் கழித்து, அப்போதைய மத்திய அமைச்சர் பிராணாப் முகர்ஜி கருணாநிதியை சந்தித்த பிறகு, "மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது" என்று தெரிவித்து ராஜினாமா நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கருணாநிதி.