காங்கிரஸ் அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது: வைகோ ஆவேசம்
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. பொது மக்களின் குமுறலும், இலங்கை தமிழர்கள் சிந்திய ரத்தமும், வேதனை குரலும் சும்மா போகாது. காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து வியாபாரிகள், பொதுநல அமைப்புகள் உள்பட பலரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணாநகர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்த பொது மக்களும் உண்ணாவிரத்தில் குதித்துள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
இலங்கையில் சிங்கள ராணுவம் நடத்திய இனப் படுகொலை உலகில் எங்குமே நடந்திராத கொடுமை. இந்த கொடுமைக்கு பாடம் புகட்ட போர் குற்றவாளியான ராஜபக்சே சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்பட ஒட்டு மொத்த தமிழினமே கிளர்ந்து எழுந்துள்ளது.
நம் சொந்தங்கள், நம் உறவுகள் கண்ணீரும், கம்பலையுமாக கதறுவதை பார்த்து பொதுமக்களே வீதிக்கு வந்து தங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஏற்க முடியாது என்கிறார். பொது மக்களின் குமுறலும், இலங்கை தமிழர்கள் சிந்திய ரத்தமும், வேதனை குரலும் சும்மா போகாது. காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது.
பொது வாக்கெடுப்பு கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை போல் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றார்.