மடத்தின் தலைவர் இறந்த வேதனையில் 3 சாமியார்கள் தீக்குளித்து மரணம்
பீதர்: கர்நாடகத்தில் மடத்தின் தலைவர் இறந்த வேதனையில் 3 சாமியார்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கர்நாடகாவில் பீதர் மாவட்டத்தில் சவுலி மடத்தை சேர்ந்த சாமியார்களான ஜெகநாத சுவாமி (21), சரணய்யா சுவாமி (18) மற்றும் வி. ரெட்டி சுவாமி (50) ஆகிய 3 பேரும் மடத்தின் வளாகத்தில் உள்ள மர கட்டைகள் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ வைத்தனர்.
அதில், அவர்கள் 3 பேரும் குதித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர். அங்கு கரிக்கட்டையாக கிடந்த மூன்று பேரது உடல்களையும் கைப்பற்றினர்.
அவர்களின் அருகில் கிடந்த தற்கொலை குறிப்பு அடங்கிய கடிதம் ஒன்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சவுலி மடத்தின் தலைவரான கணேஷானந்த சுவாமிகள் மர்மமான முறையில் கடந்த பிப்ரவரியில் மரணம் அடைந்ததால் வேதனை அடைந்த அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வழிபடும் இடமான இந்த மடத்தில் சொத்து தொடர்பான விவகாரங்களும் உள்ளன.