இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு: அரசியல் 'உறவை' வளர்க்கிறார்களாம்!
இலங்கைக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக்கும் (எப்ஐசிசிஐ), குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்களுக்கும் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தீப் தீட்சித் (காங்கிரஸ்), சௌகத் ராய் (திரிணாமூல் காங்கிரஸ்), அனுராக் தாகுர் (பாஜக), பிரகாஷ் ஜவடேகர் (பாஜக), தனஞ்சய் சிங் (பகுஜன் சமாஜ்) ஆகியோர் நேற்று மாலை விமானம் மூலம் கொழும்பு கிளம்பினர்.
இலங்கைக்கு சென்றுள்ள குழுவில் இருந்து தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மது யாஷ்கி மட்டும் பின்வாங்கிவிட்டார். இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கையில் இலங்கையுடனான அரசியல் உறவை வளர்க்க எம்.பி.க்கள் குழு அங்கு சென்றுள்ளது.
இந்த குழுவினர் வரும் 12ம் தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் ஜாப்னா பகுதிக்கு சென்று போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு செய்துள்ள பணிகளை பார்வையிடுகின்றனர்.
முன்னதாக சௌகத் ராய் கூறுகையில்,
தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவது எங்களுக்கு தெரியும். ஆனால் இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு நன்றாக இருந்தால் தானே ஈழத் தமிழர்களுக்கு நம்மால் உதவ முடியும் என்றார்.
முன்னதாக, எப்ஐசிசிஐ அமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவர் ரஃபீக் அகமது, கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.சி. முத்தையா, எப்ஐசிசிஐ தலைவரின் ஆலோசகர் முரளி ஆகியோர் எப்ஐசிசிஐ தலைவர் நயினா லால் கித்வாயை நேற்று காலை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கித்வாயிடம் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து அந்நாடு முறையாக விசாரிக்கவில்லை என்ற மனக்குறை தமிழக மக்களுக்கு உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எம்.பி.க்கள் குழு இலங்கை செல்லக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் கித்வாயி இது குறித்து பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த குழு இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்க் கட்சிகள், தொழில் துறை சமூகத்தினரை சந்தித்து பேசுகின்றனர்.