கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தார் மோதல்: எஸ்ஐ உள்பட 10 பேர் காயம்
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் அப்பகுதி ஜமாஅத்தார்களுக்கும் இன்று மதியம் நடந்த மோதலில் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பேட்டை பகுதியில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சிறுவர்களுக்கு அரபி பாட சாலை ஒன்றை தொடங்கியுள்ளனர். இங்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான வாலிபர்கள் வந்து செல்வதால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி ஜமாத்தார்கள் இவர்களிடம் வாக்குவாதம் செய்து வந்தனர்.
இன்று காலையில் அது மோதலாக வெடித்து இரு தரப்பும் கல்வீசி தாக்கி கொண்டனர். இதில் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் 100க்கும் மேற்பட்ட பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர். நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் முகாமிட்டுள்ளார். தொடர்ந்து அங்கு கலவரம் பரவாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.