விப்ரோ லாபம் ரூ 1,729 கோடி: இனி ஐடி துறையில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு!
அவுட்சோர்ஸிங்கில் நாட்டிலேயே மூன்றாவது பெரிய நிறுவனமாக திகழும் விப்ரோ, இந்த காலாண்டில் மொத்தம் ரூ 11,026 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. அதில் நிகர லாபமாக ரூ 1726 கோடி கிடைத்துள்ளது.
'அந்நிய செலாவணி மதிப்பு ஊசலாட்டத்தில் இருந்தாலும், இந்த ஆண்டு எங்கள் நிறுவனம் அதைச் சமாளித்து கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது', என விப்ரோவின் செயல் இயக்குநரும் தலைமை நிதி அலுவலருமான சுரேஷ் சேனாபதி தெரிவித்தார்.
ஐடி சேவை மூலம் வரும் வருவாய் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், பங்குகளுக்கு வழங்கப்படும் டிவிடெண்ட் ரூ 7 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விப்ரோ நிறுவனத் தலைவர் அஜீம் பிரேம்ஜி கூறுகையில், "விப்ரோவை பல்நோக்கு வர்த்தக நிறுவனமாக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டோம். முழுக்க முழுக்க இது ஒரு ஐடி நிறுவனமாகவே இனி செயல்படும்," என்றார்.
விப்ரோ காலாண்டு முடிவை அறிவித்த உடன் அந் நிறுவன பங்கு விலை 1.68 சதவீதம் குறைந்து, ரூ 368.65 ஆக விற்பனையானது.