சித்திரை திருவிழா: மீனாட்சி கல்யாணம் பார்க்க வரும் கள்ளழகர்!
மதுரை: தமிழ் நாட்டின் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொடியேற்றம் தொடங்கி மீனாட்சி திருக்கல்யாணம் மதுரையின் மாட வீதிகளில் வரை தினம் தினம் ஊர்வலம்தான்.
மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண அழகர் மலையில் இருந்து இறங்கி வரும் கள்ளழகர், தங்கையில் கல்யாணத்தை காண முடியாத சோகத்தில் வைகை ஆற்றில் இறங்கி சோகத்தை தணித்துக் கொள்வார்.
பத்து நாட்களுக்கும் மேலாக மதுரையில் நடைபெறும் இந்த திருவிழாவின் கொண்டாட்ட நிகழ்வுகளை கண்டு அனுபவிப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலரும் மதுரைக்கு வந்து செல்கின்றனர். சித்திரை திருவிழாவில் அப்படி என்னதான் நடக்கும் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
சித்திரை பிரம்மோற்சவம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாதான். அதில் முக்கியமானது சித்திரை பிரம்மோற்சவம் எனப்படும் திருக்கல்யாண நிகழ்வு. வளர்பிறையில் கொடியேற்றப்பட்டு, பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என வரிசையாக முக்கிய நிகழ்வுகள் அரங்கேறும்.
மாடவீதி விஜயம்
கொடியேற்றம் தொடங்கியதில் தேரோட்டம் வரை ஒவ்வொரு நாளும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சமேதராக எழுந்தருளி மாலை நேரத்தில் மாடவீதிகளில் குவிந்திருக்கும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். ஏப்.,21 இரவு அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மறுநாள் திருக்கண் மண்டபத்தில் அம்மனின் திக்குவிஜயம் நடக்கிறது.
மீனாட்சி கல்யாண வைபோகமே…
ஏப்ரல் 23ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மதுரை அரசாளும் மீனாட்சிக்கு கல்யாணம் என்றால் நம் சொந்த வீட்டு விசேசம் போல மக்கள் கூடுகின்றனர். பெண்கள் தங்களின் பழைய தாலிக் கயிறுக்கு பதிலாக புதுத்தாலி அணிந்து மஞ்சள், குங்குமம் சூடி கணவர் நீண்டநாள் வாழ அம்மனை வணங்குகின்றனர்.
தாலி தானம் நேர்த்திக்கடன்
பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டி தாலி, மஞ்சள், குங்குமம் நேர்த்திக்கடன் செலுத்துக்கின்றனர். திருமணம் முடிந்த உடன் மாப்பிள்ளை சமேதராக வந்து தாலி தானம் கொடுத்து நன்றி செலுத்துவது மரபாக உள்ளது.
தேரோடும் சீரான மதுரையிலே
திருக்கல்யாணம் முடிந்த உடன் மீனாட்சி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் பிரம்மாண்ட தேரில் ஏறி நான்கு மாட வீதிகளிலும் வலம் வருவார். இதனை கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கண் குளிர கண்டு ரசிப்பார்கள்.
கள்ளழகர் வராரு…
வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து ஏப்ரல் 23ம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் ஏறி மதுரைக்கு வரும் அழகரை ஏப்ரல் 24ம் தேதி மதுரை மூன்று மாவடி அருகே எதிர்கொண்டு அழைத்து வரவேற்கின்றனர் பக்தர்கள்.
கள்ளழகரிடம் குறி
மதுரை நகரை நோக்கி மெதுவாக வரும் அழகரைக் காண சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் லட்சக்கணக்கில் குவிகின்றனர். உள்நாட்டு மக்கள் மட்டுமல்ல வெளிநாட்டினரும் திரள்வதுதான் சிறப்பு.
கள்ளழகரை வரவேற்க அழகர் வேடமிட்டு வருபவர்களுடம் ஏராளமான பக்தர்கள் குறைகளை சொல்லி குறி கேட்பது வாடிக்கை. அவர்களும் அதற்கேற்ப அன்னதான காணிக்கையை பெற்றுக் கொள்கின்றனர்.
மண்டகப்படிகளில் மாற்றம்
சித்ரா பவுர்ணமியன்று ஆற்றில் இறங்கும் அழகர் மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக் கொள்வார். இந்த ஆண்டு சந்திர கிரகணம் நள்ளிரவு 1.55 மணிக்கு ஏற்படுகிறது. இதனையொட்டி 24ம் இரவு 11 மணிக்கு முன்பாகவே வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு சென்று விடுகிறார் அழகர். அங்கிருந்து கிரகணம் முடிந்த உடன் அதிகாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு ஆற்றில் இறங்குகிறார்.
வைகையில் எழுந்தருளல்
தங்கையின் திருமணத்தை காண முடியாத துக்கத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையில் எழுந்தருள்கிறார் கள்ளழகர். அவரின் அழகைக் காணவும், அவருக்கு வேர்க்குமே என்று வெப்பத்தை தணிக்கவும் உற்சாகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிப்பார்கள் பக்தர்கள்.
கண்காணிப்பு அதிகம்
லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் திருவிழா என்பதால், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி சித்திரை வீதிகளில் 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
சித்திரை வீதிகளில் கூடுதலாக 2 கோபுரங்களும், ஆவணி மூல வீதிகளில் 8 கண்காணிப்பு கோபுரங்களும், மூல வீதி, சித்திரை வீதிகளை இணைக்கும் சாலை சந்திப்புகளில் 3 கோபுரங்களும், மாசி வீதிகளில் 16 இடங்களிலும், தல்லாகுளம் பகுதிகளில் 8 இடங்களிலும் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் 4 கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
திரளும் பக்தர்கள்
ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடப்பது ஒன்றுதான் என்றாலும் அழகரை கண்டு ரசிப்பதற்காகவே வண்டி கட்டிக் கொண்டு மதுரையில் திரள்கின்றனர். திருவிழாவில் மணக்க மணக்க மதுரை மல்லிகையை சூடிக்கொண்டு வலம் வரும் கன்னிப் பெண்களை காண்பதும் கூட திருவிழாவின் சிறப்பம்சம்தான் என்றால் மிகையாகாது.