நாகர்கோவில் பாஜக தலைவர் மீது தாக்குதல்- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடையடைப்பு
நாகர்கோவில் ராமவர்மபுரம் சிதம்பரநாதன் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.காந்தி (68) பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். திருமணமாகாத இவர் கடந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றவர். அதற்கு முன் 1984, 2006ல் குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் நாகர்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கடைசியாக கடந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார்.
இவர் தினமும் காலையில் ஆசாரிப்பள்ளம் ரோட்டில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக டெப்போ வரை நடந்து சென்று விட்டு, திரும்பி வருவது வழக்கம். நேற்று காலை 6 மணிக்கு அவர் வீட்டில் இருந்து கிளம்பினார்.
ஆசாரிப்பள்ளம் ரோட்டில் நடந்து சென்றபோது, இருவர் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். காந்தி அந்த பைக்கை நெருங்கியபோது இன்னொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.
4 பேரும் திடீரென காந்தியை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு உடைந்த பாட்டிலால் அவரைத் தாக்கினர். இதில் கழுத்தின் பின் பக்கம், முதுகு, தோள்பட்டை, வலது பக்க இடுப்பு, இடது கை முட்டி ஆகிய இடங்களில் படுகாயமடைந்தார் காந்தி.
அவருக்கு ரத்தம் கொட்டியதால் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர்.
அந்த வழியாக சென்ற சிலர் காந்தி வெட்டப்பட்டு கிடப்பதை பார்த்தது அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும், பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் மருத்துவமனையில் திரண்டனர்.
காந்தியை வெட்டியவர்களை உடனே கைது செய்யக்கோரி மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரும், கட்சியின் நிர்வாகிகளும் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
பொன்.ராதாகிருஷ்ணன்...
தகவல் அறிந்ததும் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனைக்கு விரைந்து காந்தியிடம் நலம் விசாரித்தார்.
தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க நாகர்கோவில் எஸ்.பி. உதயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று கன்னியாகுமரியில் கடையடைப்பு போராட்டம்:
இந்தத் தாக்குதலைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 22) கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று காலை நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், திருவட்டார், ஆரல்வாய்மொழி, தோவாளை, கன்னியாகுமரி, சுசீந்திரம், ஈத்தாமொழி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.
சிறு கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர்.
பஸ்கள் மீது தாக்குதல்...
காந்தி தாக்கப்பட்ட தகவல் பரவியதுமே நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இதில்
களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை, திருவட்டார், குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, நாகர்கோவிலில் 28 பஸ்கள் சேதமடைந்தன.
இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் இரவு நேர பஸ்கள் இயக்கப்படவில்லை.
இன்றறு காலை 9 மணி வரையும் டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டங்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. காலை 10 மணிக்கு மேல் பதட்டம் தணிந்ததையடுத்து உள்ளூர் மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன.
கன்னியாகுமரி, நாகர்கோவிலில் பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடவில்லை. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.