இந்திய எல்லையில் 10 கி.மீ வரை சீனா ஊடுருவல்!: சீன ஹெலிகாப்டர்களும் அத்துமீறல்!!
லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி சோதனைச் சாவடி அமைத்திருப்பதாக கடந்த 15-ந் தேதியன்று இந்தோ-திபெத் எல்லை போலீசார் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் மத்திய அரசுக்கு விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.மேலும் கடந்த 15-ந் தேதியன்று இந்திய வான்பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறி பறந்ததும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இன்று இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் எல்லையில் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ராணுவ தளபதி பிக்ரம்சிங் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விரைந்துள்ளார். இந்த ஊடுருவல் தொடர்பாக இந்திய- சீனா இடையே உயர் மட்ட அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லடாக் பகுதியில் கூடுதல் படைகளை குவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாய் சீனத் தூதர் வெய் வெய்க்கு சம்மன் அனுப்பியுள்ளார். எல்லையில் உருவாகியிருக்கும் பிரச்சனைக்கு தீர்வுகாணுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் வெளியுறவுத் துறை இணைச் செயலரும் சீனாவின் வெளியுறவுத் துறை இணைச் செயலருடன் இது தொடர்பாக விவாதித்திருக்கிறார்.
அதே நேரத்தில் இந்திய பகுதிக்குள் எந்த ஊடுருவலையும் தமது ராணுவத்தினர் மேற்கொள்ளவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சகசெய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதீன், எல்லைப் பகுதியைச் சேர்ந்த சீனா ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம் என்றார்.