அடுத்த தேர்தலில் ஜெ. அதிகாரத்தில் இருக்க மாட்டார்: புழல் சிறையில் விஜயகாந்த் ஆவேசம்!
திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மு.அருண்சுப்பிரமணியம். இவருக்கு சொந்தமாக வரதராஜ நகரில் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள நகராட்சி இடத்தையும் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் தான் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. என்ற முறையில் வாக்களிக்க வேண்டும் என கூறி கோர்ட்டில் ஜாமீன் பெற்று அருண் சுப்பிரமணியம் வெளியே வந்தார். அவர் பொய்யான தகவல் கொடுத்து ஜாமீன் பெற்றதாகவும், எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 8ம் தேதி ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து தலைமறைவான அருண் சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. கடந்த 15ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அருண்சுப்ரமணியன் திருவள்ளூர் தே.மு.தி.க. மாவட்ட செயலாளராகவும் உள்ளார். அவரை அதிமுகவிற்கு இழுக்கவே கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
டென்சனான விஜயகாந்த்
இந்த நிலையில் எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியத்தை சந்திக்க நேற்று காலை புழல் சிறைக்குச் சென்றார் விஜயகாந்த். ஆனால் அவரது வாகனத்தை சிறை வளாகத்திற்குள் செல்ல சிறைத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை இதனையடுத்து டென்சனான விஜயகாந்த் காரில் இருந்து இறங்கி நடந்தே சென்றார். அவருடன் திருக்கோவிலூர் எம்.எல்.ஏ வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சேகர் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
கண்ணீர் விட்ட எம்.எல்.ஏ
அருண் சுப்ரமணியத்தை சந்தித்து 20 நிமிடங்கள் பேசிய விஜயகாந்த், ஆறுதல் கூறினார். அப்போது சிறையில் தன்னை நடத்தப்படும் விதம் குறித்து கண்ணீர் விட்டு அழுதாரம் அருண் சுப்ரமணியன். வெயிலுக்கு இதமாக தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழங்களை வாங்கிச் சென்ற எம்.எல்.ஏக்களை அதனை அருண் சுப்ரமணியத்திடம் கொடுத்துவிட்டு வந்தனர்.
சிறையில் இருந்து வெளியில் வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நில அபகரிப்பு வழக்கில், அருண் சுப்ரமணியத்தை கைது செய்துள்ளனர். அவர், சட்டப்படி வழக்கை சந்தித்து வெளியில் வந்தால், மீண்டும் புது வழக்கு போடுவர். என் மீதும், 32 வழக்குகள் போட்டுள்ளனர்.
போலீசார் மக்களை காக்கும் பணி செய்யாமல், காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனர். நான் போகும் இடத்தில் எல்லாம் போலீசாரை குவிக்கின்றனர். எனக்கோ, மக்கள் பாதுகாப்பிற்கோ, அதை செய்யவில்லை. நான் என்ன பேசுகிறேன், என் மீது, இன்னும் எத்தனை வழக்குகள் போடலாம் என்பதற்காகவே இதை செய்கின்றனர்.
சிறையில் இருப்பவர்கள் அதிமுகவுக்கு சென்றுவிட்டால், வழக்குகள் எல்லாம் வாபஸ் ஆகிவிடும். அருண் சுப்ரமணியன் நிலத்தை அபகரித்து கட்டடம் கட்டியதாக வழக்கு போட்டிருக்கின்றனர். அப்படி இருந்தால், அந்த கட்டடத்தை இடித்து, அரசு தேவைக்கு பயன்படுத்த வேண்டியதுதானே? அருண் சுப்ரமணியம் அதிமுகவுக்கு சென்றுவிட்டால், திருவள்ளூர் மாவட்டமே அங்கு சென்று விடும் என்று நினைப்பது, முட்டாள்தனமானது. அவரை நானே அதிமுகவுக்கு அனுப்பி வைக்கிறேன்; வைத்துக் கொள்ளுங்கள்.
கூட்டணி பற்றி பேசணுமா?
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி அமைத்தால் மட்டும் தான் ஜெயிக்க முடியுமா? கூட்டணி வைக்காமல் ஜெயிக்க முடியாதா?. கூட்டணி பற்றி இப்போது எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
கருணாநிதி பெரியவர் என்பதால், மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அடுத்த தேர்தலில் ஜெயலலிதா அதிகாரத்தில் இருக்க மாட்டார் என்றார்.