நிலக்கரி ஊழல் விசாரணை: சிபிஐ-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி!
இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டதில் நடந்த ஊழலால் நாட்டுக்கு பல லட்சம் கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ கடந்த வாரம் 'சீல்' வைத்த உறையிலிட்டு உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது. இதை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரான ஹரின் ராவல் தான் சமர்ப்பித்தார். அப்போது, இந்த அறிக்கையில் உள்ள விவரங்களை மத்திய அரசை சேர்ந்த எவரும் பார்க்கவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஒரு பிரதமர் அலுவலக அதிகாரி, சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், ஒரு நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரி ஆகியோர் இந்த அறிக்கையை பார்த்துள்ளதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் பின்னர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
இதனால் மத்திய அரசு பெரும் சிக்கலில் மாட்டியது. இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
நீதிபதிகள் கூறுகையில், நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த அறிக்கையை, பிரதமர் அலுவலகம், நிலக்கரித்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டிருப்பதும், சட்ட அமைச்சருடன் பகிர்ந்து கொண்டிருப்பதும் சிபிஐ மீதான நம்பிக்கையே ஆட்டம் காண செய்துவிட்டது.
சிபிஐ தனது விசாரணைகளில் தனது அரசியல் மாஸ்டர்களிடம் இருந்து எந்த உத்தரவுகளையும் பெற வேண்டியது இல்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உரிய விவரங்களைத் தெரிவிக்காமல் மூடி மறைக்க சிபிஐ முயன்றுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
அரசிடம் தனது விசாரணை விவரங்களை சிபிஐ பகிர்ந்து கொண்டது என்பது சாதாரண விஷயமல்ல.
சிபிஐயின் விசாரணை அறிக்கை யார், யாருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்ற விவரத்தை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்.
சிபிஐயின் சுதந்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டியது மிக மிக அவசியம். அரசியல் தலையீடுகளில் இருந்து சிபிஐயை விடுவிக்க வேண்டியது தான் நமது முதல் வேலை என்றனர் நீதிபதிகள்.
6ம் தேதி பதில் மனு-சிபிஐ:
உச்ச நீதிமன்றம் கொடுத்த சாட்டயடியைத் தொடர்ந்து சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா இன்று மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் கோரியபடி நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை யார், யாருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்பது குறித்து வரும் மே 6ம் தேதி அறிக்கை தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அகமத் படேலுடன் பிரதமர் ஆலோசனை:
நிலக்கரி ஊழல் தொடர்பான அறிக்கை சட்ட அமைச்சர் அஸ்வினி குமாருடனும் பிரதமர் அலுவலக அதிகாரியுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டதையடுத்து சட்ட அமைச்சரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் வெடித்துள்ளதால் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமத் படேலுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
உரிய முடிவு எடுக்கப்படும்-மன்மோகன் சிங்:
இந் நிலையில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நான் ஆய்வு செய்து வருகிறேன். முழுமையாக ஆராய்ந்த பிறகு இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பிரதமரைக் காப்பாற்ற அஸ்வினி குமாரை பதவியில் இருந்து காங்கிரஸ் கழற்றிவிடும் என்று தெரிகிறது.