சேலத்தில் காந்தி சிலை உடைப்பு: போலீசார் தீவிர விசாரணை
சேலம்: சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் உள்ள மகாத்மா காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. அந்த சிலையில் உள்ள இரண்டு கைகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். காந்தி சிலை உடைப்பு குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சேலம் போலீஸ் உதவி கமிஷனர் உதயகுமார், கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கம்பம் நடும் விழா நடந்தது. அப்போது அங்கு போதையில் வந்த ஆசாமிகள் சிலையின் கைகளை உடைத்திருக்கலாம் என்று தெரிய வந்தது.
இதனையடுத்து காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் மகாத்மா காந்தி சிலையை உடைத்த நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் அரசுக்கும், போலீசாருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.