கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஜெ. தீர்மானம்- நிறைவேற்றம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கச்சத் தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை 1974ம் ஆண்டைய இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்து ஜெயலலிதா கூறுகையில்,
தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திலிருந்து 10 மைல் தொலைவில் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தீவு கச்சத் தீவு. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவு, சுதந்திரம் அடைந்த பின்பு, இந்திய நாட்டுடன் இணைக்கப்பட்டது.
1974ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தம் ஏற்படும் வரை, தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில், கச்சத் தீவு பகுதியில் மீன் பிடித்து வந்தனர். 1974ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்திலும் பாரம்பரிய மீன் பிடி உரிமைகள் இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், இந்திய மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கவோ, கச்சத் தீவில் ஓய்வெடுக்கவோ, இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதில்லை.
எல்லை மீறினார்கள் எனத் தெரிவித்து இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. பல சமயங்களில் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல நேர்வுகளில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்து மீறல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு கச்சத் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை நாட்டிடம் இருந்து திரும்பப் பெறுவதே என்பதால், இது குறித்த முக்கிய தீர்மானத்தை இப்பேரவையில் முன்மொழிய விழைகிறேன்.
அந்தத் தீர்மானம்...
"தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும், துன்புறுத்துதல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில் கொண்டும், பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது" என்னும் தீர்மானத்தினை முன்மொழிகிறேன் என்றார் ஜெயலலிதா.
இதையடுத்து இந்தத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்களும் பேசினர். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசுகையில்,
உலகில் பல்வேறு நாடுகளுக்கிடையே பல்வேறு பொருட்கள் குறித்து ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சர்வதேச ஒப்பந்தங்கள் எல்லாம் இன்றளவும் நடைமுறையில் மதிக்கப்படுகின்றன; கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், 1974ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தம் மட்டும் ஆரம்ப காலம் முதல் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து அவமதித்து வருகிறது.