இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூன் 21-ந்தேதி தொடக்கம்: அண்ணா பல்கலை
தமிழ்நாட்டில் இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் ஜூன் 21ம் தேதி தொடங்கி ஜூலை 30 ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடங்கியது. சென்னை அண்ணா பல்லைக்கழகத்தில் விண்ணப்பம் வழங்கும் பணியை பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் பார்வையிட்டார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்த வருடம் 2 1/2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் 50 ஆயிரம் கூடுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 12 முதல் 20 கல்லூரிகள் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மொத்தம் 2 லட்சம் இடங்கள் நிரப்பப்படும் என்றார்.
பி.டெக் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்க 10 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. கூட்டம் அதிகரிக்கும் நிலையில் மேலும் 10 கவுண்டர்கள் திறக்கப்படும்.
இன்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜூன் 21-ந்தேதி தொடங்கி ஜூலை 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. ரேண்டம் எண் ஜூன் 5-ந்தேதியும் ரேங்க் பட்டியல் 12-ந்தேதியும் வெளியிடப்படும். ஆகஸ்டு 1-ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரிகள் திறக்கப்படும். பி.இ.ஆர்க்கிடெக் படிப்பிற்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். அப்போது விண்ணப்பிக்க வேண்டும்.
கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
தமிழ்நாட்டில் மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 522 தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளாகும். கட்டமைப்பை மேம்படுத்தாத கல்லூரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றை நிவர்த்தி செய்யாவிட்டால் இடங்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.