சேது சமுத்திரத் திட்டம் இந்துக்கள் மனதை இம்மியளவும் புண்படுத்தாத திட்டம்: கருணாநிதி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுகவுக்குப் பெயர் வந்துவிடும் என்பதற்காகவே பல கோடி ரூபாய் செலவழித்த பிறகு சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ராமர் பாலம் என்றெல்லாம் அதற்கு வர்ணம் பூசி மதப் பிரச்னையை ஏற்படுத்த முயல்கின்றனர்.
ராமர் பாலம் அந்தப் பகுதியில் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை என்றும், தொல்லியல் ஆராய்ச்சியும் இப்படி ஒரு பாலம் இருந்ததாக உறுதி செய்யவில்லை என்றும் மாநிலங்களவையில் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி திட்டவட்டமாக எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளார். சேது சமுத்திரத் திட்டச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு தலைவர் எஸ்.கண்ணையன் 2007, ஏப்ரல் 25-ல் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில் ராமர் பாலம் என்றழைக்கப்படும் ஆதாம் பாலத்தின் 70 இடங்களில் 20 மீட்டர் ஆழத்துக்கு பாறை மாதிரிகளை ஜியோ கெமிக்கல் முறையில் சோதனை செய்தோம்.
அதில் கடலில் உள்ள படிமங்கள்தான் உள்ளன. அறிவியல் ரீதியாக ராமர் பாலத்தை மனிதர்கள் உருவாக்கியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பாலம் இருக்கும் இடத்துக்குப் பதிலாக வேறு இடத்தில் கால்வாய் தோண்டினால் மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் 26 தீவுகளும் அழிந்துவிடும் வாய்ப்பு அதிகம் என்று கண்ணையன் தெரிவித்தார்.
அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் ராமர் பாலம் இருப்பதற்கான ஆதாரமாக செயற்கைக்கோள் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா வெளியிட்டிருப்பதாகக் கூறுகின்றனர். இது தொடர்பாக அப்போது மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு நாஸா அமைப்புக்கே கடிதம் எழுதினார்.
ராமர் பாலம் இருப்பதாக நாஸா படங்கள் வெளியிட்டதில் உண்மை இல்லை என்று டி.ஆர்.பாலு அந்தக் கடிதத்தில் கூறியிருந்தும் நாஸாவிடமிருந்து பதில் வரவில்லை.
ஹிந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே ராமர் பாலம் இருப்பதாக பிரச்னையைக் கிளப்புகின்றனர். ஆனால் அங்கு பாலம் இல்லை. ஹிந்துக்களின் மனம் புண்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று டி,ஆர்.பாலு அப்போதே உறுதியாகச் சொன்னார். அந்த கருத்தை நானும் இப்போது கூறுகிறேன். சேது சமுத்திரத் திட்டம் ஹிந்துக்களை இம்மியளவும் புண்படுத்தாத திட்டம் ஆகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.