விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் தீவைத்து எரிப்பு: மறைமலைநகரில் பதட்டம்
சென்னை: மறைமலைநகரில் விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் தீவைத்து எரிக்கப் பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மறைமலைநகர் அடிகளார் சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் ஒன்று, கீற்று கொட்டகையிலான கட்சி அலுவல கத்திற்கு தீ வைத்து தப்பி ஓடி விட்டனர். காற்றின் வேகத்தால், தீ மளமளவென கொட்டகை முழுவதும் பரவி பற்றி எரிந்தது.
தகவல் அறிந்ததும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். ஆனாலும், அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, பேனர்கள் எரிந்து நாசமானது.
கட்சி அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்ட செய்தி அறிந்து ஏராளமான விடுதலை சிறுத்தை பிரமுகர்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் சமாதானம் ஆனார்கள்.
இது குறித்து மாவட்ட துணை செயலாளர் தென்னவன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க மறைமலை நகரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.