2 மணி நேர 'கரண்ட் கட்' சென்னைக்கு 12வது இடம்... கரண்ட்டே இல்லாத மாவட்டங்கள் கலக்கிய கதை!!!
சென்னை: மாணவர் தேர்ச்சி விகிதத்தில் தலைநகர் சென்னை 12வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. சென்னையும், சிவகங்கையும் ஒரே அளவிலான தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.
ஒரு காலத்தில் டென்த், பிளஸ்டூ முடிவு என்றாலே சென்னை மாநகரப் பள்ளிகளின் பெயர்கள்தான் பட்டையைக் கிளப்பும். எந்த ரேங்க்காக இருந்தாலும் அது சென்னையாகவே இருக்கும். ஆனால் இப்போது அந்த பெருமை பறி போய் விட்டது.
கடந்த பல ஆண்டுகளாகவே சென்னை மாணாக்கர்கள் பெரிய அளவில் ரேங்க் பெற தவறி வருகின்றனர். இதனால் சென்னை மாநகர பெற்றோர்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். எங்கு தவறு, ஏன் இப்படி என்ற கேள்விகள் அலை மோதுகின்றன.
என்ன விசேஷம் என்றால் சென்னையில் 2 மணி நேர கரண்ட் கட்தான் அமலில் உள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் பல மணி நேர மின்வெட்டு புரட்டிப் போட்டது. பரீட்சை சமயத்திலும் மின்வெட்டு பிரமாண்டமாகவே இருந்தது. இப்படி இருந்தும் 11 மாவட்டங்கள் சென்னையை முந்தி வந்திருப்பது பெரிய விஷயம்தான்.
விருதுநகரின் விஸ்வரூபம்
தேர்ச்சி விகத்தில் தொடர்ந்து குட்டியூண்டு விருதுநகர் மாவட்டம்தான் முதலிடத்தை பிடித்து வருகிறது. சின்னஞ்சிறிய மாவட்டமான விருதுநகர் தொடர்ந்து முதலிடத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்து வருவது பெரும் ஆச்சரியம்தான்.
தேனி கூட பரவாயில்லையே...
அதேபோல இன்னும் ஒரு சின்ன மாவட்டமான தேனியில் கூட சென்னையை விட அதிக தேர்ச்சி சதவீதம் வந்துள்ளது. அதாவது 9வது இடத்தை அந்த மாவட்டம் பெற்றுள்ளது.
12 வது இடத்தில் சென்னை
தலைநகர் சென்னை இந்த வரிசையில் 91.82 சதவீத தேர்ச்சியுடன் 12வது இடத்திற்கு வந்துள்ளது.
சிவகங்கையும், சென்னையும் சமமா...?
சிவகங்கை மாவட்டமும் இதே அளவிலான தேர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. அதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சென்னையைப் போலவே 91.82 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளது சிவகங்கை.
90 சதவீதத்திற்கும் கீழ் நிறைய
திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 90சதவீதத்திற்கும் கீழான தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
3 மாவட்டங்களில் 80க்கும் கீழே
விழுப்புரம், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் கீழ் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
கடைசி இடத்தில் திருவண்ணாமலை
மிகவும் குறைந்தஅளவிலான தேர்ச்சி திருவண்ணாமலையில்தான் பதிவாகியுள்ளது. இங்கு 69.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.