மாவோயிஸ்டாக ஆயுதம் தூக்கிய அம்பேத்கர் உறவினர்
தண்டகாருண்ய காடுகள்... மகாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திரா, சத்தீஸ்கர் என விரிந்துகிடக்கும் 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் காடுதான் மாவோயிஸ்டுகளின் கோட்டை... இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் செயலாளராக இருப்பவர் மிலிந்த் டெல்டும்ப்டே. மகாராஷ்டிரா மாநிலத்தின் யவட்மால் மாவட்டம் ரஜூர் கிராமத்தில் பிறந்தவர். இவரது வயது 47... இவரது சகோதரர் ஆனந்த், அரசியல் சாசன சிற்பியும் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சருமான அண்ணல் அம்பேத்கரின் பேத்தியை திருமணம் செய்திருக்கிறார். இவர் எப்படி மாவோயிஸ்டாக உருவானார்?
பொறியாளரான மிலிந்த், 1980களின் பிற்பகுதியிலும் 90களின் தொடக்கத்திலும் வெஸ்டர்ன் கோல்பீல்டு நிறுவன தொழிற்சங்கத்தில் தீவிரமாகப் போராடியவர்... அப்போது மகாராஷ்டிராவின் கட்சிரோலி உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டிருந்த மாவோயிஸ்டுகளுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது என்கிறார் கட்சிரோலி போலீஸ் அதிகாரி சாயூஸ் ஹக். மாவோயிஸ்டு சித்தாந்தவாதிகளான அனுராதா, கோபாட் ஆகியோர்தான் மிலிந்த் டெல்டும்ப்டேவுக்கு கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகம் செய்து வைத்தனர். 1993ல் இருந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அம்பேத்கரின் சாதி ஒழிப்புக்கான செயல் திட்டங்கள் அரசியல் சாசனத்தில் இணைக்கப்படவில்லை... அவரது நில உரிமை பற்றிய பார்வைகளும் இணைக்கப்படவில்லை என்றார் அவர்.
இவர் மட்டுமல்ல... அம்பேத்கரின் பேரனாகிய நாடறிந்த பிரகாஷ் அம்பேத்கரும் கூட மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவே பேசுகிறார்... "ஒரு சித்தாந்தத்தை பின்பற்றுவது என்பது கிரிமினல் குற்றம் அல்ல என்கிறது நீதிமன்றம்... அது வன்முறையாக உருவெடுக்கும்போதுதான் கிரிமினல் குற்றமாகிறது. அம்பேத்கரும் கூட வன்முறைப் பாதையை விரும்பியது அல்ல.. ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கையை வைத்திருந்தார்..."என்கிறார் பிரகாஷ் அம்பேத்கர்.. அண்மையில் மகாராஷ்டிராவில் நக்சல்கள் என முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்ட கபிர் கலா மஞ்ச் அமைப்பின் ஷீட்டர் சாதே, சச்சின் மாலி ஆகியோர் சரணடைவதில் முக்கியப் பங்காற்றியவர் பிரகாஷ் அம்பேத்கர் என்பதும் குறிப்பிட்த்தக்கது.
எல்லாமுமே வரலாறாகிவிடுகிறது!