பிரபல சென்னை ரவுடி தாடி சுரேஷ் படுகொலை
சென்னை: சென்னையில் பிரபல ரவுடி தாடி சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். 10 பேர் கொண்ட கும்பல் சுரேஷை கொலை செய்து விட்டுத் தப்பியது.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் தாடி சுரேஷ். நேற்று மாலையில் அவர் பைக்கில் தனது வீட்டிலிருந்து கிளம்பியபோது அவரை 10 பேர் கொண்ட கும்பல் மறித்து நிறுத்தியது.
பின்னர் நடுரோட்டில் வைத்து சுரேஷை அக்கும்பல் சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இருந்தும் அவர் உயிரிழக்கவில்லை என்பதால், அந்தக் கும்பல் மிகவும் கொடூரமாக சாலையோரம் கிடந்த பெரிய கல்லைத் தூக்கி சுரேஷ் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்தனர்.
அத்தோடு நிற்காமல் சுரேஷின் உடல் உறுப்புகளையும் கொடூரமாக வெட்டி எறிந்தனர். பின்னர் அந்தக் கும்பல் சாவகாசமாக தப்பிச் சென்றது. இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில்தான் பஸ் நிலையம், காவல் நிலையம் உள்ளது.
சுரேஷ் வட சென்னையின் பெரிய ரவுடியாவார். பல கொலை வழக்குகள் இவர் மீது உள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் சிறைக்கும் போய் வந்துள்ளார். வடசென்னையின் அசைக்க முடியாத தாதாவாக முயற்சித்து வந்தார். இந்த நிலையில்தான் அவரை போட்டுத் தள்ளி விட்டனர்.