பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் வெளியே வந்தார்
தூத்துக்குடி வெங்கடேச பண்ணையாரின் சகோதரர் சுபாஷ் பண்ணையார் குடும்பத்தினருக்கும், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியனுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முதல் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே அந்த பகுதியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்தது.
இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் பசுபதி பாண்டியன் திண்டுக்கலில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் பெயரும் அடிபட்டது. இதனால் போலீஸ் அவரை தேடியது. இந்த தகவல் அறிந்த சுபாஷ் பண்ணையார் தலைமறைவானார்.
கடந்த ஓராண்டுக்கு மேல் தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார். இதனையடுத்து, திருச்செந்தூர் சப் -கோர்ட்டில் அவர் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
மேலும், திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் சுபாஷ் பண்ணையாரின் தரப்பைச் சேர்ந்த மாயா என்பவரின் உறவினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் சுபாஷ் பண்ணையார் குற்றவாளியாக உள்ளதால் இந்த வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் நிலுவையில் இருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கிலும் அவர் முன்ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களால் சுபாஷ் பண்ணையார் உயிருக்கு ஆபத்து உள்ளதாக உளவுத்துறை போலீசார் தங்களது தலைமைக்கு ஏற்கனவே தகவல் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட சுபாஷ் பண்ணையாரின் நடவடிக்கைகளை உளவுத்தறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.