உதகை மலர் கண்காட்சி: 70,000 மலர்களால் ஆன 'தலைமை செயலகம்'
நீலகிரி: உதகமண்டலத்தில் 117 வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. 70 ஆயிரம் மலர்களால் ஆன தலைமைச்செயலகம் தான் இந்த ஆண்டு மலர்கண்காட்சியின் சிறப்பு என சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டு தோறும் கோடை காலத்தில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மலர்கண்காட்சி இன்று தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியைக் காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர்.
குதூகலமாக தொடங்கி கண்காட்சி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 3 நாட்கள் நடக்கும் இந்த மலர் கண்காட்சியை, தமிழக வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் துவக்கி வைத்தார்.
மலர் கண் காட்சியை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயில் பகுதியில், 20 அடி உயரமும், 8 அடி அகலத்திற்கு லில்லியம் மலர்களை கொண்டு பிரமாண்ட வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
மலர் வளைவுகள்
இதுதவிர பூங்காவில் 4 இடங் களில் மலர்களால் ஆன அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
பலநாட்டு மலர்கள்
நெதர்லாந்தை பூர்வீகமாக கொண்ட துலிப்ஸ் மலர்கள், ஆஸ்திரேலியாவில் காணப்படும் புரோட்டிலியா மலர்கள் என உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர்களும், ஊட்டி தாவரவியல் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
காய்கறி அலங்காரங்கள்
இது தவிர பல்வேறு அரங்குகளின் தனியார் நிறுவனங்கள் சார்பில் மலர் அலங்காரங்கள் மற்றும் காய்கறி அலங்காரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.
மலர் தலைமைச் செயலகம்
117 வது மலர் கண்காட்சியில், 70 ஆயிரம் வகையான மலர்களை கொண்டு தமிழக அரசின் தலைமை செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 20 அடி உயரம் 15 அடி அகலத்தில் கார்னேசன், ரோஜா உட்பட பல்வேறு மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலர் உலக உருண்டை
மேலும், 15 அடி உயரம் 7 அடி விட்டத்தில், சுமார் 3 ஆயிரம் மலர்களைக் கொண்டு உலக உருண்டை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர 500 மலர்களை கொண்டு கங்காரு, பல்வேறு கொய்மலர்களை கொண்டு தமிழக அரசின் முத்திரை உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஹனிமூன் ஜோடிகள்
சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது கோடை விடுமுறையில் எண்ணற்ற ஹனிமூன் ஜோடிகளும் உதகையின் மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர்.
பூக்காத பூக்கள்
பருவ மழை ஏமாற்றியதால் பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் போதிய அளவு மலர்கள் பூக்கவில்லை என்றாலும் பல வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.