கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு கொலை: ச்ச்சீ சீ இது நம்ம மதுரை தானா?- வியக்கும் மக்கள்
மதுரை: மதுரையில் அதிகரித்து வரும் கலாச்சார சீரழிவுக் கொலைகள் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கோவில் நகரமான மதுரையில் நேற்று நள்ளிரவில் 3 இடங்களில் கொலைகள் நடந்துள்ளன. திருநகர், சமயநல்லூர் மற்றும் சோழவந்தான் அருகே உள்ள தனிச்சியம் ஆகிய இடங்களில் தான் இந்த 3 கொலைகள் நடந்துள்ளன. கள்ளக் காதல் கொலை, கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் தங்கை கணவரை கொலை செய்த அண்ணன் மற்றும் மருமகளை மாமனாரே வெட்டிக் கொலை என்ற காரணங்கள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சோழவந்தான் அருகே உள்ள அய்யங்கோட்டையில் கல்லூரி மாணவர் சுப்பிரமணி(19) தனது மைத்துனரால் கொல்லப்பட்டு வீட்டிற்குள்ளேயே புதைக்கப்பட்டார். அவரை கொலை செய்த குற்றத்திற்காக ஆறுமுகம் என்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் மதுரை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடும்பத் தகராறால் 6 பேர் கொலை செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் மதுரை மாடக்குளத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டார். கலாச்சார பின்னணி கொண்ட மதுரையில் குடும்ப சீர்கேட்டால் கொலைகள் நடப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த கலாச்சார சீர்கேட்டை தடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்கும் ஆர்வலர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.