மூட்டு வலிக்கு மருந்தாகும் ‘ஓம்’ யோகா
சென்னை: ஓம் என்பது மந்திரச் சொல் மட்டுமல்ல, நல்ல மருந்தும் கூட என்று யோகா நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஒற்றைச் சொல்லைச் சொல்லும்போது மூட்டு வலி பறந்து போய் விடுகிறதாம்.
இந்த ஓம் யோகா பயிற்சியை சென்னையில் உள்ள அரசு யோகாசனம் மற்றும் நேச்சுரோபதி கல்லூரியில் சொல்லிக் கொடுக்கிறார்கள். அங்கு மூட்டு வலி பிரச்சினைக்காக வருவோருக்கு யோகா சொல்லித் தருகிறார்கள். மேலும் குறிப்பாக ஓம் பாராயணத்தையும் சொல்லித் தருகிறார்கள்.
இந்த ஓம் மந்திரத்தை தினசரி 30 முறை சொல்லி வருகிறாராம் அப்துல் காதர் என்ற வியாபாரி. 50 வயதான இவருக்கு மூட்டுவலி பிரச்சினை இருக்கிறது. இதிலிருந்து மீள இந்த ஓம் பாராயணம் காதருக்கு உதவியுள்ளதாம்.
தொழுகை மாதிரியே யோகாவும்...
இதுகுறித்து அவர் கூறுகையில், தினசரி நான் தொழுகையில் ஈடுபடுவதால் எனக்கு மூட்டு வலி பிரச்சினைஉள்ளது. ஆனால் தற்போது இந்த ஓம் பாராயண யோகா பயிற்சியால் எனக்கு மூட்டு வலி வெகுவாக குறைந்து நிவாரணம் ஏற்பட்டுள்ளது. என்னால் எளிதாக முட்டி போட்டு தொழுகையில் ஈடுபட முடிகிறது என்கிறார்.
மருத்துவ பயன்கள்...
இதுகுறித்து கல்லூரி உதவிப் பேராசிரியை டாக்டர் கனிமொழி கூறுகையில், ஓம் என்பது மந்திரம் மட்டுமல்ல, நல்ல மருந்தும் கூட. குறிப்பாக மூட்டு வலிக்கு இது உகந்த நிவாரணம் தருகிறது. புற்று நோயாளிகளுக்கும் கூட இது நிவாரணம் தருகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பதட்டத்திற்குக் காரணமான ஹார்மோன்கள் மட்டுப்படுகின்றன. வலி நிவாரணியாக இந்த மந்திரம் பயன்படுகிறது. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நல்ல மருத்துவ பயன்கள் ஏற்படுவது அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜாதி, மத பேதமின்றி...
யோகாசனத்தோடு இந்த ஓம் உச்சரிப்பையும் இங்கு சொல்லித் தருகிறார்கள். இதை மத பாகுபாடின்றி அனைவரும் பின்பற்றுகின்றனர் என்பது ஆச்சரியமானது.
உச்சரிப்பு பலன்...
வலி, தூக்கமின்மை வியாதி, பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த ஓம் மந்திர உச்சரிப்பு நல்ல பலனைத் தருமாம்.