கட்சி பதவிகளில் இருந்து விலகினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி
டெல்லி: பாஜக பிரச்சார குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட மறுநாள் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.
பாஜக செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்ளவில்லை. தனக்கு வயிறு சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.
இது அத்வானிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 85 வயதாகும் அத்வானி கட்சி பதவிகளை இன்று ராஜினாமா செய்துள்ளார். அத்வானியை சமாதானம் செய்ய முயன்ற பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் முயற்சி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜகவின் உட்கட்சி பூசல் பெரிதாகியுள்ளது.
அத்வானியின் ராஜினாமாவை ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அத்வானியை சமாதானம் செய்யும் முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
அத்வானி தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது,
நான் எனது வாழ்நாள் முழுவதும் ஜனா சங் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்காகவே உழைத்துள்ளேன். அதில் நான் இதுவரை திருப்தியே அடைந்ததே இல்லை.
சமீபத்தில், கட்சியின் தற்போதைய நிலைமையோடு என்னால் ஒத்துப் போக முடியாது என்று நான் அறிந்து கொண்டேன். கட்சி போகும் பாதை எனது கருத்துக்கு மாறானது. தீனதயாளன், வாஜ்பாய் போன்ற பல்வேறு தலைவர்களின் கொள்கைகளோடு உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது அந்த கொள்கைகள் இல்லை. பாஜகவில் இருக்கும் பல தலைவர்கள், தங்கள் சொந்த நலனை முக்கியமாகக் கொண்டே செயல்படுகின்றனர்.
எனவே பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்தும், நாடாளுமன்றக் குழுவில் இருந்தும், தேர்தல் குழுவில் இருந்தும் விலகிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.