நான் எப்பொழுது பவுலிங் பண்ணாலும் இடுப்பில் துண்டு இருக்கும்: ஸ்ரீசாந்த்
டெல்லி: நான் எப்பொழுது பந்து வீசினாலும் இடுப்பில் துண்டு வைத்திருப்பேன் என்று ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் அங்கீத் சவான் மற்றும் ஸ்ரீசாந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சாண்டிலா ஜாமீன் கோரவில்லை.
நேற்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்த ஸ்ரீசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் இடுப்பில் துண்டை வைத்திருந்தது தரகரக்களுக்கு நான் கொடுக்கும் சிக்னல் அல்ல. நான் எப்பொழுது பந்து வீசினாலும் இடுப்பில் துண்டு வைத்திருப்பேன். என் வாழ் நாள்முழுவதும் நான் விளையாடியுள்ள போட்டிகளில் முழுமனதோடு விளையாடியுள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த ராஜஸ்தானுக்கு நன்றி. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை சிறையில் உள்ள டிவியில் பார்த்தேன். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும்போது அதில் நான் இருப்பேன் என்று நம்புகிறேன். என்னால் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட முடியும். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த நிமிடம் தான் மகிழ்ச்சியானது.
நான் நிரபராதி என்பது நிரூபிக்கப்படும். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.