பெடெரல் முன்னணியில் இணைய சந்திரபாபு நாயுடுவும் விருப்பம்!
லோக்சபா தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடம் பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் இந்த புதிய அணியில் சேரலாம் என்றும் மம்தா அழைப்பு விடுத்துள்ளார். தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு இந்த அணிக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறுகையில், மத்தியில் புதிய கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் பேசி வருகிறேன். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத புதிய மத்திய கூட்டணி அரசை அமைப்பதில் தெலுங்கு தேசம் கட்சி ஆர்வமாக உள்ளது.
மம்தா பானர்ஜியின் புதிய அணியில் தெலுங்கு தேசம் கட்சி இணைய தயாராக உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கூட்டணிகள் நாளுக்கு நாள் பலவீனமாகி வருகின்றன. ஆனால் மாநில கட்சிகள் பலம் மிக்கதாக மாறி உள்ளன. புதிதாக அமைய உள்ள அணி அடுத்த மத்திய அரசை அமைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.