உத்தரகண்டில் பிணக் குவியல்களால் நோய் பரவும் அபாயம்: எரிக்கும் பணி துவக்கம்!
ருத்ரபிரயாக்: உத்தரகண்டில் வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உடல்களை எரிக்கும் பணி துவங்கியது.
உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 800க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் உயிர் இழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே கிடப்பதுடன் அவை அழுகத் துவங்கிவிட்டன. உடல்களை அப்படியேவிட்டால் நோய் பரவும் அபாயம் ஏற்படும். இதனால் உடல்களை மொத்தமாக வைத்து எரிக்க முடிவு செய்யப்பட்டது.
ஹெலிகாப்டரில் விறகுகள்
கேதர்நாத்தில் குவிந்து கிடக்கும் பிணங்களை எரிக்க காய்ந்த விறகுகள் இல்லாததால் கௌசாரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் விறகு கட்டுகள் கொண்டு வரப்பட்டன.
கேதர் பள்ளத்தாக்கு
ருத்ரபிரயாக் மாவட்டம் கேதர் பள்ளத்தாக்கில் பிணங்களை குவியலாகப் போட்டு எரிக்கும் பணி நேற்று துவங்கியது.
எத்தனை உடல்கள் எரிக்கப்பட்டன?
கேதர் பள்ளத்தாக்கில் எத்தனை உடல்கள் நேற்று எரிக்கப்பட்டன என்பது சரியாகத் தெரியவில்லை. ஏனென்றால் இந்த பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மாவட்ட மாஜிஸ்திரேட் திலீப் ஜவால்கர் தெரிவித்துள்ளார்.