இளவரசன் மரணம்- உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்: கருணாநிதி
சென்னை: இளவரசன் மரணம் தற்கொலையா? கொலையா? என்பது குறித்து உயர் மட்ட அளவில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாதிக் கலவரம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அவ்வாறே அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் கலவரத்தில் 250 வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள், வண்டிகள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்தும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள் இருந்த பீரோக்களை உடைத்து நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு அதன் பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள்.தர்மபுரி வன்முறையில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசின் சார்பில் ஓரளவு நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.
இவ்வளவிற்கும் பிறகு அங்கே அமைதி ஏற்படவில்லை. திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்தச் சம்பவத்தின் உச்சக் கட்டமாக திருமணம் செய்து கொண்ட அந்த "தலித்" சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் மாண்டு விட்டார்.
எப்படி மாண்டார் என்பதே தெரியவில்லை. தற்கொலையா? கொலையா? என்பது பற்றி உரிய விசாரணை உயர் மட்ட அளவில் நடத்தப்பட வேண்டும். கொலை என்றால் உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இளைஞரைப் பறிகொடுத்த அந்தக் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.
"காதலோர் தொடர்கதையே! சாதலும் ஏற்போம் அணுச் சஞ்சலமும் அடையோம் எனும் காதலோர் தொடர்கதையே!" என்று நான் எப்போதோ எழுதியது என் நினைவுக்கு வருகிறது. காதலியின் குடும்பத்தில் தந்தை மாண்டு விட்டார். காதலர் குடும்பத்திலோ அவரே மாண்டு விட்டான். தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் இனியும் நடக்கக் கூடாது.
இந்த நிகழ்ச்சியே ஒரு பாடமாக இருந்திட வேண்டும். சாதிவெறிக்கு சமுதாயத்தில் இனியும் இடம் இல்லை என்பதை நிலைநாட்ட பாடுபடுவோம் என்று இதயமுள்ளோர் அனைவரும் சபதம் மேற்கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.