இலவச கறவை மாடுகள் ஆசையில், கேரளாவுக்கு முறைகேடாக கடத்தப்படும் ‘தமிழக’ மாடுகள்
செங்கோட்டை: செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு அதிக அளவில் கால்நடைகள் முறைகேடான வழியில், அதிகாரிகள் துணையோடு கடத்தப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று அவ்வாறு கடத்தப்பட்ட நூறு மாடுகள் சமூக ஆர்வலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து கேரள மாநில மக்களின் தேவைகளுக்காக காய்கறிகள், பால், மீன்கள், மலர்கள், மூட்டைகள், கோழிகள், சிமிண்ட், மணல், கிரசர் பொடி, மர தடிகள் போன்ற அத்திவாசிய பொருட்கள் நாள்தோறும் எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இறைச்சிகாக மாடுகள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 500 முதல் ஆயிரம் வரையிலான மாடுகள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்துள்ளது. கடத்தப்படும் மாடுகள் , 2 நபர்களுக்கு 50 மாடுகள் வீதம் கொண்டு அழைத்துச் செல்லப்படுகிறது. பெரும்பாலும் இவை கால்நடையாக அழைத்துச் செல்லப்படுவதால், சந்தேகம் எழுவதில்லை.
சாலை ஆக்ரமிப்பு...
செங்கோட்டை முதல் கோட்டை வாசல் வரை ஓட்டி செல்லப்படும் இந்த மாடுகளால், சாலை முழுமையும் ஆக்கிரமிக்கப் பட்டு போக்குவரத்து நெரிசல் உருவாகிறதாக அச்சாலையில் பயணிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.
பால் தட்டுப்பாடு...
ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறைச்சிக்காக கடத்தி செல்லப்படுவதால் தமிழகத்தில் பாலுக்கு கடுமையான தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி...
தமிழக அரசு வீட்டுக்கு ஒரு கறவை மாடு இலவசமாக கொடுத்து வருகிறது. தமிழகதத்தில் போதுமான கறவை மாடுகள் இல்லாததால் அரசு வெளிமாநிலங்களில் இருந்தும் கறவை மாடுகள் இறக்குமதி செய்தும் பயனாளிகளுக்கு கொடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.
இலவச கறவை மாடுகள் பெற...
ஆனால் பயனாளிகள் தமது வீட்டில் மாடு இல்லாவிட்டால் தான் தமிழக அரசின் இலவச கறவை மாடுகள் கிடைக்கும் என்ற தவறான தகவலால் தங்களது வீட்டில் இருக்கும் கறவை மாடுகளையும் இறைச்சிக்காக விற்று வரும் சூழலும் தற்போது ஏற்பட்டுள்ளது.
கன்றுக்குட்டி இறைச்சி...
மேலும் கேரளாவில் இளம் கன்று இறைச்சிக்கு நல்ல மவுசு இருப்பதால் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லும் கால்நடைகளில் அதிக அளவில் சிறிய கன்று குட்டிகளே காணப்படுகின்றன. பகலில் கால்நடையாக ஓட்டிச் செல்லப்படும் இந்த மாடுகள் இரவில் லாரிகள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகிறது.
கால்நடைகளுக்கு தனிப்பிரிவு...
எனவே புளியரையில் உள்ள சோதனை சாவடியில் கால்நடைகளுக்கு என ஒரு தனிப்பிரிவு செயல்பட்டால்தான் இங்கிருந்து இறைச்சிகாக கால்நடைகள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க இயலும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டுமனைகள்...
இதுகுறித்து தன்னர்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் மேய்ச்சலுக்கான இடங்களும் தற்போது குறைந்து வருகிறது. அப்படியே இருந்தாலும் அவற்றையெல்லாம் வீட்டு மனைகளாக விற்று வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் விவசாயமும் நடைபெறவில்லை.
வைக்கோல் பற்றாக்குறை...
இதனால் மாடுகளுக்கு தேவையான வைக்கோல் போன்ற உணவும் கடுமையான தட்டுபாட்டில் இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது கால்நடைகளை கேட்கும் விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கேரளாவில் மவுசு அதிகம்...
தமிழக கால்நடைகளுக்கு கேரளாவில் அதிக விலை கிடைப்பதால் அவர்கள் இங்கு வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் நயினாகரம், கடையம் மாட்டு சந்தைகளில் கேரள வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்யும் மாடுகளை இம்மாவட்ட கிராமப்புறத்தினர் 1 மாட்டுக்கு கூலியாக ரூ.150 பெற்றுக் கொண்டு கேரள மாநில எல்லைப்பகுதியான கோட்டை வாசல் வரை கொண்டு சென்று லாரிகளில் ஏற்றி விட்டு விட்டு திரும்பி வருகின்றனர்' எனத் தெரிவித்தனர்.
தடுத்து நிறுத்திய தொண்டுநிறுவனத்தினர்...
நயினாகரத்தில் சனிக்கிழமை சந்தை என்பதால் நேற்று காலை சுமார் 300க்கும் மேற்பட்ட மாடுகளை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்து தனித்தனியாக தொழிலாளர்கள் மூலம் கால்நடையாக தலா 5 மாடுகள் விதம் அனுப்பிய நிலையில் அம்மா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த், விழுதுகள் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சேகர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் புளியரை-புதூர் விலக்கில் வைத்து சுமார் 100 பசுமாடுகளை கேரளாவுக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தினர்.
கால்நடைகள்...
மேலும் இதுகுறித்து செங்கோட்டை தாசில்தார், மற்றும் கால்நடை துறை அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் புகாரை தொடர்ந்து செங்கோட்டை பொறுப்பு வட்டாட்சியர் சுகுமார், துணை வட்டாட்சியர் சுப்புராயலு, வருவாய் ஆய்வாளர் வின்சென்ட், விஏஓக்கள் முருகேசன்,நீலச்சாமி ஆகியோர் விரைந்து வந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட மாடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலி உரிமம்....
பின்னர் கால்நடைத்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு புளியரை கால்நடை மருத்துவர் ஜெயபால்ராஜாவை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவரிடம் வருவாய் துறையினர் விசாரணை நடத்தியதால் சான்றிதழ்களில் தான் கையெழுத்து போடவில்லை என்றும் அவை போலியானது என்றும் தெரிவித்தார். மேலும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகளுக்கு கடந்த இரண்டு ஆண்டாக தடுப்பூசி போடாமல்தான் கொண்டு செல்வதாகவும் தான் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகளுக்கு சான்றிதழ் வழங்குவதில்லை என்றும் தெரிவித்தார்.
அதிகாரிகள் துணை...
மேலும் காவல்துறை அதிகாரிகள் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்ல கால்நடை அலுவலர்கள் சான்று பெறப்படுகிறதா, விலங்குகள் வதை தடுப்புசட்டம் 1960ன் முக்கிய ஷரத்துகள் பின்பற்றாமல் வாகனங்களில் மாடுகள் ஏற்றி செல்லும் போது கழுத்தில் புண் ஏற்படாமல் அதிக கனம் ஏத்தாமல் கண்காணித்தல்,லாரிகளில் கொண்டு செல்லப்படும் மாடுகளுக்கு போதிய இடவசதி, சுகதாரம், தண்ணீர், கால்நடை மருத்துவ சான்றிதழ் இல்லால் அதிக மாடுகளை ஏற்றுவது இதற்கு மொத்த அதிகாரிகளும் துணையாக செயல்படுவது வியப்பாக உள்ளது.