சேது திட்டத்தை நிறைவேற்றக் கோரி திமுக இன்று ஆர்ப்பாட்டம்.. நாகையில் கருணாநிதி
சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுதுவம் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாகையில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று அதிமுக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்குமூலத்தினை திரும்பப் பெறக் கோரியும், சேது சமுத்திரத் திட்டத்தை மேலும் தாமதம் செய்யாமல் உடனே மத்திய அரசு நிறைவேற்றக் கோரி வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.
தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் இன்று காலை 9.00 மணியளவில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதே போல, வடசென்னை மாவட்ட திமுக சார்பில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி. சேகர் தலைமையில்- தணிக்கைக்குழு உறுப்பினர் எல்.பலராமன், சட்டத்துறை இணைச் செயலாளர் இரா.கிரி ராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் நாளை காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாகையில் கருணாநிதி
நாகையில் நடைபெறும் போராட்டத்துக்கு போராட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரத்தில் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், கன்னியாகுமரியில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கடலூரில் ராஜ்யசபா எம்.பி கனிமொழி தலைமை தாங்குகின்றனர்.